Thursday, June 11, 2009

புத்த ஞாயிறு

புத்த ஞாயிறு

"துளைக்க முடியாத கவசம் : பொறுமை"

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர், அரச குலத்தில் பிறந்து, இந்த உலக மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக, தம்முடைய 30 ஆம் வயதுக்கு மேல் காடு மேடல்லாம் 7 வருடங்கள் அலைந்து திரிந்து, மரணத்தின் விளிம்பு வரை சென்று, புத்தர் என்னும் சித்தார்த்தர் கண்டுபிடித்த அற்புதமான கருத்துக்கள்.


நிகரற்ற நன்மை அடைபவன் : மற்றவர்க்கு தானம் செய்பவன்.
தலைசிறந்த பொக்கிஷம் : ஒழுக்கம்
கூர்மையுள்ள வாள் : கோபத்தில் பேசிய சொல்
கொடிய விஷம் :பேராசை
கொடிய நெருப்பு :காமம்
இருளடர்ந்த இரவு :பேதைமை
அருவறுப்பானது :தீமை
கொடிய காய்ச்சல் :துவேஷம்

பௌத்த மதத்தை பின்பற்றுபவர்களில், ஒரு பகுதியினர், தமிழர்களை கொல்லும் கொடியவர்களாக இருக்கலாம். ஆனால் இது புத்தரின் பிழையன்று. இந்த உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற நினைத்தவரின் பெயரை சொல்லிக் கொண்டு காலத்தை ஓட்டும் கொடுங்கோடாரிகள் அவர்கள். அவர்களை விட்டு விடுவோம்.

துளைக்க முடியாத கவசம் : பொறுமை

ஒருவரது தவறுகளை பொறுத்துக் கொள்வது மட்டும் பொறுமை அன்று. ஒருவரது செயல்களை வேண்டுமென்றே எதிர்ப்பது கூட, ஒரு வகையான பொறுக்காமை தான். கூடவே இருந்து குழிபறித்தாலும், இதை திடமோடு எதிர்கொள்ளும் மனது வேண்டும். அண்ணா சொன்னதுபோல் "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்". அய்யோ இவனே இப்படி செய்துவிட்டானே என்றெண்ணி, அழுது புரண்டு, ஒடுங்கி விடக்கூடாது. அதைத் தாங்கிக் கொண்டு, நாம் அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றி யோசிக்க வேண்டும். (உணர்ச்சி வசப்படக் கூடாது அவ்வளவுதான்)

சச்சின் டெண்டுல்கர் ஒரு முறை சொன்னார் "என்னை தூற்றுபவர்களுக்கு, என் பேட்டிங்கின் மூலம் பதில் சொல்கிறேன்". எவ்வளவு அழகான வார்த்தைகள். அவர் யாரையும் (தன்னை குறை சொன்னவர்களைக் கூட) திட்டியதில்லை. குறை கூறியதில்லை. ஆனால் அவர் ஒரு சதம் அடித்து விட்டாரென்றால், அவரைப் பற்றி வந்த அத்தனை விமர்சனங்களும் மறைந்து விடும்.

அதாவது அவர் தம்மேல் வந்த விமர்சங்களை பொறுத்துக் கொண்டார்.அன்பு வழியில் பதில் கொடுத்தார். இதனால் தான் புத்தர் சொன்னார் "துளைக்க முடியாத கவசம் : பொறுமை"

(90 களில் இந்தியாவை ஆண்ட பிரதம அமைச்சர் திரு. நரசிம்ம ராவ் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஹர்சத் மேத்தா என்ற, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர் ஒரு கோடி ரூபாயை ஒரு சூட்கேசில் வைத்து கொடுத்தேன் என்றார்.(அப்போது 500 ரூ தாள் புழக்கத்துக்கு வந்திருக்கவில்லை) ஆயிரம் முறை பேட்டி கொடுத்தார். ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் எப்படி 100 ரூ நோட்டுகளை ஒரு சூட்கேசில் வைத்தேன் என்று டெமோ காட்டினார். ஆனால் எதற்கும் பதில் கூறவில்லை திரு ராவ் அவர்கள். இதைப் பற்றி ஒன்றுமே பேசவில்லை. ஆறு மாதங்கள் மௌனம் காத்தார். இந்த பிரச்சினை அப்படியே மறைந்து போய் விட்டது. )


"செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக் கீழ்த்தங்கும் உலகு" - குறள்

"காதே அறுந்து போகுமளவுக்கு வந்த விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்ளும் வேந்தனின் கீழ்தான் இந்த உலகமே இருக்கும்"

(நண்பர்களே! உண்மைதானே! அலுவலகதில் மேலதிகாரியோ, வீட்டில் அம்மா அப்பாவோ, வீட்டம்மாவோ திட்டும் போது இதை நினைவில் கொள்ளுங்கள். கோபம் வருவதற்கு பதில், ஜாலியாக இருக்கும்... )

No comments: