Saturday, June 25, 2011

பாரதிதாசன் பாடல்களில் சமூக விழிப்புணர்வு

முகிலைக் கிழித்து வெளிக் கிளம்பும் ஒரு முழுமதி போல".... தமிழ்நாட்டில் தோழர் பாரதிதாசனின் கவிதை தேன்றியுள்ளது. புரட்சிக் கருத்துகள் அவரது உள்ளத்தில் பொங்கிப் பூரித்து, புதுமைக் கவிதைகளாக வெளிவருகின்றன. இயற்கையின் எழில், காதல், மேம்பாடு, கலை நுணுக்கம் முதலியனபற்றி அவர் இயற்றியுள்ள கவிதைகள் படிப்போரைக் களிப்புக் கடலில் ஆழ்த்தும். ஆனால், புத்துலகக்கரை கொண்டு போய்ச் சேர்க்கும். வீரச் சமுதாயம், "கடவுள்", "மதம்", என்னும் கட்டறுத்து காதல், கவிதை, கலை எனும் நறுமணச் சோலையில் உலவும் நல்ல சமுதாயம், "ஓடப்பர்" இல்லது "ஒப்பப்பர்" உள்ள சமுதாயம், வஞ்சகத்தை வீழ்த்த வாளெடுக்கத் துணியும் தீரச் சமூகம் - இது கவியின் இலட்சியம்.


பெண் விடுதலை


"ஆடை அணிகலன் ஆசைக்கு வாசமலர்
தேடுவதும் ஆடவர்க்குச் சேவித் திருப்பதும்
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும்
கெஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம்
மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர்பகுதி'' (பாரதிதாசன் கவிதைகள்)


- என்று பெண்கள் நிலையைக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், இந்நிலை அறவே களையப்பட வேண்டும் என்பதையும் கடுமையான குரலில் முழங்குகின்றார். பெண்ணைத் தூற்றும் பேயர்களைப் பின்வருமாறு சாடுகின்றார்:


"பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ?
மண்ணுக்குக் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை!
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே!
ஊமையென்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு!
புலனற்ற பேதையாய்ப பெண்ணைச் செய்தால்அந்
நிலம்விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே!''  (பாரதிதாசன் கவிதைகள்)


- என்ற பாடலில், பெண்ணினத்தின் பேதமை நீங்கப் பெரிதும் முயலவேண்டும் என முழங்குகிறார் கவிஞர்.
குடித்தனம் பேணுதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும், உலகினை உணர்ந்து கொள்வதற்கும் பெண்களுக்கே கல்வி வேண்டும் என்று கூறி,


"கல்வியில்லாத பெண்கள் களர்நிலம் அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம்! நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை
நல்லறிவுடைய மக்கள் விளைவது நவிலவோ நான்! (குடும்ப விளக்கு)


-என்று கல்லாத பெண்ணினத்தைக் "களர்நிலம்" என்றும் உவமைகாட்டிப் பெண் கல்வியின் சிறப்பினை உணர்த்துகின்றார். பெண்மை உயர்வுக்குண்டான வழியைப் பாரதி கண்ட புதுமைப் பெண்களை உருவாக்கும் வழியைப் பாடுகிறார். தான் காண விழையும் சமுதாயப் புரட்சிக்குத் துணையாய் நின்று தோள்கொடுப்பவர்கள் பெண்களே" என்பது இவர்தம் அசையாத நம்பிக்கை!


"அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்
எண்ணும்படி அமைத்தீர்! இப்படியே பெண்ணுலகம்
ஆகும்நாள் எந்நாளோ அந்நாளேதுன்பமெல்லாம்
போகும்நாள் இன்பப் புதிய நாள் என்றுரைப்போம்!'' (பாரதிதாசன் கவிதைகள்)
என உறுதியாகக் கூறுகிறார் கவிஞர்!


சமுதாயச் சீர்திருத்தம்


இளமைத் திருமணத்தை எதிர்க்கும் புட்சிக்கவிஞர், விதவைத் திருமணம் வேண்டுமென்கிறார். கைம்பெண் நிலைக்குக் கழிவிரக்கம் ஒன்று "கோரிக்கையற்றுக் கிடக்கு தன்னே இங்கு வேரிற் பழுத்த பலா'' என்று கூறி,


"ஆடவரின் காதலுக்கும் பெண்கள் கூட்டம்
அடைகின்ற காதலுக்கும் மாற்றமுண்டோ?
பேடகன்ற அன்றிலைப் போல் மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல் செயப் பெண் கேட்கின்றான்?
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின்மணத்தல் தீதோ?
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ?" (குறிப்பு 6)


என்று, இளமையில் கைம்மை ஏற்ற இளம்பெண்ணின் நல்வாழ்வுக்கு வாதிடும் முறையால் வினாவினை எழுப்பி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார்.
தமிழ்ச் சமுதாயம் பாழ்பட்டுப் போனதற்குக் காரணமான மூட நம்பிக்கைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும், புராண இதிகாசங்களையும், சாதி சமயங்களையும், பெண்ணடிமை நிலையையும் பாரதிதாசன் எதிர்த்தார். இவையே, "சஞ்சீவிப் பர்வதத்தின் சாரல்"  காப்பியத்தின் மையப் பொருளாகவும் அமைகின்றன.


சாதியும் சமயமும் 


"சாதிப் பிரிவு சமயப் பிரிவுகள்
நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும்
மூடப் பழக்க வழக்கங்கள் எல்லாம்
முயற்சி செய்தே ஓடச் செய்தால்"


சமூகமும் நாடும் விடுதலை பெறும் என்பது கவிஞரது எதிர்பார்ப்பு. "கவிஞரின் மிக இளமைக் காலத்திலேயே எழுதப்பெற்ற இந்நூலில் பெண் விடுதலை பேசப்படுகிறது. பெண்ணடிமை செய்கின்ற தமிழ்நாட்டைக் கண்டு கவிஞர் எந்த அளவு சீற்றம் கொள்கிறார் என்பதை அறிய முடிகிறது". இந்நாட்டின் சமுதாயக் குறைகள் 1936 - ஆம் ஆண்டிலேயே கவிஞனை எங்ஙனம் விழிப்பு அடையச் செய்தன என்பதை அறிய முடிகிறது.


தமிழ் 
பாண்டிய, சோழ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களின் பல நூற்றாண்டு கால ஆட்சியில் வட மொழி தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள, தமிழானது பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது.  மேலும் புதியவரவான ஆங்கில ஆதிக்கத்தின் கீழ்ப் புதிய சமுதாய நிலைமைகளும் பொரு ளாதார உறவுகளும் தோற்றம் பெற்றன. 
இக்கால கட்டத்தில் உண் டாகிய அரசியல் சமூக பொருளாதார மாற்றங்களிடையில் தமிழுணர்வு தமிழரை ஒன்றிணைக்கும் சக்தியாகத் திகழ்ந்தது.  ஆற்றுக்குக் காவலாகக் கரைகள் அமைந்திருப்பதைப் போலத் தமிழினத்தின் அரசியல், பண்பாடு, மற்றும் வரலாற்றுச் சிறப்புகளின் காவலனாகத் தமிழ் மொழி அமைந் துள்ளது. 
ஓர் இனத்தின் வாழ்வும் தாழ்வும் அம்மக்களின் மொழிக்குக் கிடைக்கும்  சிறப்பினைப் பொறுத்தே அமையும்.  பாரதிதாசனும்,


"நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந்தானே "
 என்கிறார்.


நம்முடைய தாய்மொழியாம் தமிழ் வளமுடன் இருந்தால் தமிழர் வாழ்வும் வளம் பெறும்.  தமிழ் நலிந்து போனால் தமிழர் தம் வாழ் வும் நலிந்து போகும் எனக் கூறும் பாரதிதாசன் தமிழர்தம் வாழ்வின் அடிப்படை தமிழே எனத் தெளிவு படுத்துகின்றார்


தொழிலாளர்:
பளபளக்கும் பாட்டாடை உடுத்தும் ஆலை முதலாளிகளின் மனத்தில் வஞ்சகமும் சூழ்ச்சியும் பிறர் உழைப்பை உறிஞ்சும் கயமைத் தனமும் நிறைந்திருக்க, உழைக்கின்ற பாட்டாளி மக்களோ அழுக்குத் துணியில் இருந்தாலும் அவர்தம் நெஞ்சத்தில் அறம் நிறைந்து இருக்கும் என்பதை,


"அழுக்குத் துணிக்குள்ளே
அறத்தோடு பிணைந்துள்ள 
அவ்வுயிரே  என்றன் ஆருயிராம்!"


எனப் பாரதிதாசன் அழகாக் குறிப்பிடுவதைக் காணலாம்.


இயற்கையின் அழகைக் காணும் பொழுதும் அதனை எடுத்துரைக்கும் போதும் அதிலும் உழைப்பாளர் களின் துயர வாழ்வை எடுத்துரைக் கும் பாரதிதாசனின் பரந்த மனத்தை நாம் பல இடங்களில் காணலாம். 


பொதுவுடைமைச் சமுதாயத்தைத் தமிழ் மண்ணில் உருவாக்க விழைந்த பாரதிதாசனின் மனமானது இங்குள்ள ஜாதி, சமய மூடத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வருவதிலேயே முதல் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருந்தது என்பதையும் நாம் அறிய முடிகிறது.  உயர்ந்த வாழ்க்கையை அடைவதற்கான நெறியானது உயர்ந்த பண்புகளை உள்ளடக்கியதாக அமைகிறது.  அவற்றை எடுத்துரைக்கும் முகமாய் பாரதிதாசன்தம் பாடல்கள் அமைந் துள்ளன.


தமிழர் தாம் இழந்திருந்த கலை இலக்கிய, பண்பாட்டுச் சிறப்புகளையும் வரலாற்றுப் பெருமைகளையும் தம் பாட்டுத் திறத்தால் மீட்டுத் தர வேண்டும் என முழக்கமிட்டவர் பாரதிதாசன். 


வாழ்வின் விழுமியங்களை எடுத் துரைப்பனவாக அமையும் பாரதி தாசனின் படைப்புகள் தமிழர் தம் வளமான வாழ்க்கைக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைவன என்பதில் அய்யமில்லை. 

No comments: